Site icon Tamil News

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஒரு வருடங்களேனும் செல்லும் – நிதி இராஜாங்க அமைச்சர்

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு  குறைந்தது ஒரு வருடங்களேனும் செல்லும் .ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தினால் நாடு சற்றேனும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பொருளாதார நிலைமை தொடர்பில் மக்களிடம் உண்மையை குறிப்பிட்டு அரசியல் செய்வோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம்,) ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம், நிதி குத்தகைக்கு விடுதல் (திருத்தச்) சட்டமூலம், உள்நாட்டு நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தச்) சட்டமூலம், கம்பனிகள் (திருத்தச்) சட்டமூலம் ஆவணங்கள் பதிவுக் கட்டளைச் சட்டம் (திருத்தச்) சட்டமூலம் என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்களினால் நாட்டு மக்கள் குறுகிய கால நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள். இதனை எதிர்க்கட்சிகள் தமது அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நீண்டகால  திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன.கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் இருந்த நிலைமைக்கும் தற்போதைய நிலைமைக்கும் இடையில் பாரியதொரு வேறுபாடுகள் காணப்படுகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து  நாட்டின் நிதி ஒழுக்கம் உறுதியாக பேணப்பட்டு,நிதி ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது  நாட்டின்   அரச வருமானம் 11 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன. சமூக கட்டமைப்பின் பிரச்சினைகளுக்கு கட்டம் கட்டமாக தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எரிபொருள்,எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு தட்டுப்பாடு காணப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தவுடன்  வரிசை யுகத்தை முதலில் முடிவுக்கு கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு குறைந்தபட்சம் ஒரு வருடங்களேனும் செல்லும் அரச வருமானத்தை அதிகரித்தவுடன்,  பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு விட முடியும் என்று குறிப்பிடுவது பொருளாதார முகாமைத்துவ கொள்கைக்கு பொருத்தமற்றது. அரசியல் நோக்கத்துக்காக பொருளாதார  விடயங்களில் பொய்யுரைக்க முடியாது.மக்களை தவறாகவும் வழிநடத்த முடியாது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமாரவின் உரையாடல்களில் அவரது பொருளாதார கொள்கையை நன்கு விளங்கிக் கொள்ள முடிகிறது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு குறுகிய கால அடிப்படையில் தீர்வு காணாமல் இருந்திருந்தால் அது  மக்கள் விடுதலை முன்னணிக்கு  சாதகமாக அமைந்திருக்கும். ஆகவே தற்போதைய பொருளாதார மீட்சியை மக்கள் விடுதலை முன்னணியினர் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  தீர்மானங்களினால் நாடு சற்றேனும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உரிய  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டதும், பொருளாதார நிலை குறித்து உண்மையை குறிப்பிட்டு அரசியல் செய்வோம் என்றார்.

Exit mobile version