Site icon Tamil News

நிறுவனத்தில் CEO பதவி – AI தொழில்நுட்பத்தின் அதிரடி நடவடிக்கை

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், AI ஆல் இயங்கும் ரோபோ ஒன்று ஒரு நிறுவனத்திற்கு CEO-ஆக நியமிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல பகுதிகளில் இருந்தும் AI தொழில்நுட்பத்தின் சாதக பாதகங்கள் குறித்த அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதில் சிலர் இந்தத் தொழில்நுட்பத்திற்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தத் தொழில்நுட்பத்தால் தற்போது வரை எவ்விதமான ஆபத்து இல்லை என்ற போதிலும், எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற கேள்வி அனைவருக்கும் இருந்து வருகிறது.

இத்தகைய அச்சங்களை உண்மையாகும் வகையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ ஒன்று, ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண் உருவம் கொண்ட ரோபோவின் பெயர் மிகா. போலந்து நாட்டைச் சேர்ந்த ட்ரிங்ஸ் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று சோதனை முயற்சியாக இந்த ரோபோவை சிஇஓவாக நியமித்துள்ளது. இது நிறுவன வளர்ச்சி சார்ந்த எல்லா விஷயங்களிலுமே ஈடுபடுகிறது. வியாபார உத்தி, லாப நஷ்டம், மார்க்கெட்டிங் யுக்தி போன்ற நிறுவனத்தின் எல்லா முடிவுகளையும் இந்த ரோபோ எடுக்கிறது. நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இந்த ரோபோவே தீர்மானிக்கிறது.

குறிப்பாக, ஆபீசுக்குள் இந்த ரோபோ திட்டமிட்டபடி வேலைகள் நடக்கவில்லை என்றால் கோபப்பட்டு சத்தமும் போடும். எந்த துறை சரியாக செயல்படவில்லை, எந்த துறைக்கு வேலை ஆட்கள் அதிகம் தேவை, எந்த வேலையை யார் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் மிகா ரோபோவே சொல்கிறது. இந்த ரோபோவின் அதிநவீன செயல்பாடுகளால் உலகத்தின் கவனம் இதன் பக்கம் திரும்பியுள்ளது.

இதனால் எதிர்காலத்தில் உற்பத்தி துறையில் அதிக முடிவுகளை எடுக்க நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக இந்த மிகா ரோபோ உள்ளது எனலாம்.

Exit mobile version