முன்னாள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவின் மரணம் மின்சாரம் தாக்கியதன் காரணமாக உள் உறுப்புகளில் ஏற்பட்ட பலத்த சேதம் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவில் இடம்பெற்றது.
களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவின் பிரதம சட்ட வைத்திய அதிகாரி கே.எம்.டி.பி குணதிலக்க தலைமையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
களுத்துறை சட்ட வைத்திய அதிகாரி விசேட வைத்தியர் வைத்தியர் கே.எம்.டி.பி குணதிலக்க, கரம்பெத்தறை நவுட்டுடுவ யடதொலவத்தையில் பாலித தெவரப்பெரும விபத்துக்குள்ளான இடத்தில் பிரேத பரிசோதனையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் விபத்துக்குள்ளான இடத்தை களுத்துறை குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் அவதானித்துள்ளதுடன், மத்துகம மேலதிக நீதவானும் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில் சடலம் களுத்துறையில் உள்ள மலர்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதிச் சடங்கு எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.