Site icon Tamil News

பாகிஸ்தானில் ஓடும் பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 8 பேர் பரிதாமாக பலி!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஓடும் பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர், 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜில்ஜித் பல்டிஸ்டான் பகுதியில் சுமார் 50க்கும் மேற்படோருடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பாகிஸ்தானின் பெஷாவர் மற்றும் சிலாஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த பேருந்தில் பயணித்தனர். நேற்று இரவு சில்லாஸ் பகுதி அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது, தீவிரவாதிகள் திடீரென பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரில் வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் விபத்தில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் இருவர் இந்திய ராணுவத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் 26 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்து, விபத்தில் சிக்கியதை தொடர்ந்து அங்கிருந்து தீவிரவாதிகள் தப்பி ஓடி உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தீவிரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Exit mobile version