Site icon Tamil News

தெல்லிப்பழை பகுதியில் பதற்றம்!!! STF குவிப்பு

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்ற கும்பலை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சிசிரிவி காணொளிகளை கொண்டு
வன்முறைக் கும்பலை தேடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு வேளையிலும் தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வன்முறைச் சம்பவத்தில் எங்களுக்கு தொடர்பில்லை என தெரிவித்து ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் தனது காருக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில்
ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழு மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது இன்று மாலை 5.30 மணியளவில் சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து வன்முறை கும்பல் ஹயஸ் வானில் மருதனார்மடம் நோக்கி தப்பிச் செல்லும் போது துரத்தி சென்ற பொலிஸார் மல்லாகம் பகுதியில் வாகனத்துக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தினர்.

தப்பியோடிய வன்முறை கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்ய தெல்லிப்பழை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம் அருகில் வீதியில் இருந்து வாள்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பனவும் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாள்வெட்டில் காயமடைந்த 28 வயதான இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version