Site icon Tamil News

T20 WC – முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி

T20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் இந்தியா- அயர்லாந்து அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து இந்தியாவின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 96 ரன்னில் சுருண்டது.

ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 97 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி 5 பந்தில் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ரோகித் சர்மா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும், அதேவேளையில் அடிக்கக்கூடிய பந்தை அடித்து விளையாடினர்.

ரோகித் சர்மா 36 பந்தில் அரைசதம் அடித்தார். இதனால் இந்தியா 10 ஓவரில் 76 ரன்கள் விளாசியது.

10 ஒவர் முடிந்த நிலையில் ரோகித் சர்மா 37 பந்தில் 52 ரன்கள் எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். இதனால் சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார்.

சுழற்பந்து வீச்சாளர் ஒயிட் வீசிய பந்தை தூக்கிய அடிக்க முயன்ற சூர்யகுமார் கேட்ச் ஆகி 2 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து ஷிவம் டுபே களம் இறங்கினார். அப்போது இந்தியா 11.4 ஓவரில் 91 ரன்கள் எடுத்திருந்தது.

13வது ஓவரின் 2வது பந்தை ரிஷப் பண்ட் சிக்சருக்கு தூக்கினார். இதனால் இந்தியா 12.2 ஓவரில் 97 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரிஷப் பண்ட் 26 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷிவம் டுபே ரன் ஏதும் எடுக்காமல் இருந்தார்.

Exit mobile version