Tamil News

உக்ரைனுக்கு ஆதரவு ;அமெரிக்காவை முதன்முறையாக எதிரி நாடாக அறிவித்துள்ள ரஷ்யா

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு முதல் உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், தங்கள் எல்லைக்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் அளிப்பதற்குப் பதிலடியாக, அந்த நாடுகளின் எதிரிகளுக்கு அதே போன்ற ஆயுதங்கள் விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய அதிபா் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளாா்.

வடகிழக்குப் பிராந்தியமான காா்கிவில் அண்மைக் காலமாக ரஷ்யா முன்னேறிவரும் நிலையில், அந்தத் தாக்குதலை முறியடிக்க காா்கிவ் எல்லைக்கு மிக அருகே உள்ள ரஷ்ய பகுதியில் மட்டும் உக்ரைன் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த அதிபா் ஜோ பைடன் அனுமதி அளித்ததாக தகவல்கள் வெளியாகின. அதை அடுத்து, தங்கள் ஆயுதங்களைக் கொண்டு ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல் நடத்தும் உரிமை உக்ரைனுக்கு உள்ளது என்று ஜொ்மனி அண்மையில் அறிவித்தது. அதற்குப் பதிலடியாகவே, மேற்கத்திய நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதற்காக அவற்றின் எதிரி நாடுகளுக்கு ஆயுதங்கள் அளிக்கப்போவதாக விளாடிமிர் புதின் எச்சரித்திருந்தார்.

Flags of the United States and Russia.

இந்த நிலையில், விளாடிமிர் புட்டினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அமெரிக்காவை முதன்முறையாக எதிரி நாடு எனக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர், “இப்போது நாங்கள் அவர்களுக்கு எதிரியாக இருக்கிறோம். அதுபோல், அமெரிக்கா எங்களுக்கு எதிரி நாடாக உள்ளது” எனத் தெரிவித்திருப்பது உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, அமெரிக்க முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஸ்காட் ரிட்டர் ரஷ்யாவிற்கு பயணம் செய்ய இருந்தார். இவர், அமெரிக்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் கலந்துகொள்ள புறப்பட்டபோது அவருடைய பாஸ்போர்ட் அமெரிக்க காவல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்குப் பதிலளித்தபோதுதான் டிமிட்ரி, அமெரிக்காவை எதிரி நாடு எனக் குறிப்பிட்டார். இது அமெரிக்க-ரஷ்யா உறவுகளில் மேலும் சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது.

Exit mobile version