Site icon Tamil News

ஒரே நேரத்தில் 23 செயற்கை கோள்களை விண்ணில் ஏவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

ஒரே நேரத்தில் 23 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அவை அனைத்தையும் வெற்றிகரமாக நிலை நிறுத்தி சாதனை படைத்துள்ளது.

உலகின் பல நாடுகளும் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி அவற்றை விண்ணில் நிலை நிறுத்தி நிறுத்தி பயன்படுத்துகின்றன. தகவல் தொடர்பு, தட்பவெப்பம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை மிகப்பெரிய பலனை அளிக்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்தியாவுக்காக மட்டுமல்லாது மற்ற பல நாடுகளுக்காகவும் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புகிறது. இதே போல வளர்ந்த நாடுகள் பலவும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை வெகுவாக பயன்படுத்துகின்றன.

இதேபோல அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் மனிதர்களும் விண்ணுக்குச் சென்று வெற்றிகரமாக தரை இறங்கி வருகிறார்கள். அடுத்த கட்டமாக தற்போது செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவதையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு இருக்கிறது.

இந்நிறுவனத்தின் சார்பில் நேற்று ஒரே நேரத்தில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பப்பட்டன. இவை அனைத்தும் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இதற்காக புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 வகை ராக்கெட் ஏவப்பட்டது. அது வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும், இந்த செயற்கைக்கோள்கள் நம்பமுடியாத அளவுக்கு அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்கும் எனவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version