Tamil News

தாயின் ஆசீர்வாதங்களுடன் புயலாய் கிளம்பினார் தளபதி

நடிகர் விஜய் முன்னணி ஹீரோவாக, ரசிகர்களின் தளபதியாக, விஜய் மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து செல்பவராக பல விஷயங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருபவர்.

இவருடைய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் மட்டும் எப்போதும் குறை வைத்ததில்லை. ரசிகர்கள் விஜய்யை, அவரது படங்களை கொண்டாடி வருகின்றனர்.

விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை சமீப காலங்களாக அதிகமான அளவில் முன்னெடுத்து வந்தார் விஜய். இதுவே இவரது அரசியல் பிரவேசத்திற்கான முன்னெடுப்பாக கருதப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய கட்சியை அறிவித்துள்ளார் விஜய். தமிழக வெற்றி கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை அறிவித்துள்ள விஜய், தன்னுடைய அரசியல் பிரவேசம், சினிமா பிரவேசம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் அம்மாவும் பிரபல பாடகியுமான ஷோபா சந்திரசேகர் தன்னுடைய மகனுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். விஜய்யின் இந்த முடிவுக்கு அம்மாவாகவும் சமூக பொறுப்புள்ள பெண்மணியாகவும் தான் பதில் சொல்ல வேண்டியுள்ளதாக அவர் தனியார் சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு அரசியல் பொறுப்பு உள்ளதாகவும் ஏராளமான மக்களின் அபிமானத்தை பெற்ற விஜய் போன்ற ஒரு ஆளுமைக்கு அரசியலில் நுழையும் பொறுப்பு இருப்பதாக தான் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

புயலுக்கு பின் அமைதி என்று கூறப்படும் நிலையில், விஜய்யின் அமைதிக்கு பின்பு ஒரு அரசியல் புரட்சி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகனுக்கு ஓட்டுப் போடவிருக்கும் ஒரு அம்மாவாக தனக்கு இதில் தனி சந்தோஷம் இருப்பதாகவும் ஷோபா கூறியுள்ளார். தமிழக வெற்றி கழகம் பெயருக்கு ஏற்றாற்போலவே தமிழகத்தில் வெற்றி பெறும் என்றும் அவர் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

விஜய்க்கு மதம், ஜாதி போன்றவற்றில் ஈடுபாடு இல்லை என்றும் தனக்கு பின்னால் இருப்பவர்களும் முன்னால் வரவேண்டும் என்று நினைப்பார் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். அவருடைய ரசிகர்கள் தற்போது தொண்டர்களாக மாறியுள்ளதாகவும் விரைவில் தலைவர்களாக மாறுவார்கள் என்றும் ஷோபா கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய ஷோபா, வாகை சூடு விஜய் என்று விஜய்க்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

Exit mobile version