Tamil News

ரஷ்ய அதிபர் தேர்தல்; கேரளாவில் நடந்த விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ரஷ்யாவில் இன்று நடைபெற்று வரும் அதிபர் தேர்தலுக்கு கேரளாவில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு அங்குள்ள ரஷ்ய மக்கள் தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

ரஷ்யாவில் அதிபர் தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. நாளை மறுதினம் வரை மொத்தம் மூன்று நாட்கள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ரஷ்ய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தவண்ணம் உள்ளனர். ரஷ்ய பகுதிகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

ரஷ்யாவின் 11 மண்டலங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருகிறது. இதேபோல் வெளிநாடுகளில் வாழும் ரஷ்யர்கள் வாக்களிக்க அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்கள், துணை தூதரகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள ரஷ்ய மக்கள் அந்த சிறப்பு வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். அதேபோல மின்னஞ்சல் முறையிலும் தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர்.

ரஷ்ய அதிபர் தேர்தல் வாக்குச்சாவடி

அந்தவகையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ரஷ்ய துணை தூதரகமான ரஷ்ய இல்லத்தில் அதிபர் தேர்தலுக்காக சிறப்பு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள ரஷ்ய குடிமக்கள் அங்கு சென்று வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் குடியேறிய ரஷ்யர்களும், தற்போது சுற்றுலாவுக்காக அங்கு வந்திருப்பவர்களும் அங்கு சென்று ஆர்வத்துடன் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர்.

ரஷ்ய அதிபர் தேர்தலுக்காக கேரளாவில் வாக்குச்சாவடி அமைக்கப்படுவது இது மூன்றாவது முறை என்று ரஷ்யாவின் கவுரவ தூதரும், ரஷ்ய இல்லத்தின் இயக்குநருமான ரதீஷ் நாயர் தெரிவித்தார். மேலும், இதற்கு ஒத்துழைப்பு அளித்த ரஷ்ய குடிமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

Exit mobile version