Site icon Tamil News

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் – நிபுணர்கள் எச்சரிக்கை

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் குளிர்காலத்தில் இந்த தொற்று பரவும் அபாயம் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

சீனாவின் வுகானில் 2019ம் ஆண்டின் இறுதியில் முதன்முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் மிகப் பெரிய தொற்றுநோயாக மாறியது.

இதில் உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதே நேரத்தில், கொரோனா லட்சக்கணக்கானவர்களின் ஆரோக்கியத்தை தற்போது வரை பாதித்துள்ளது.

இதற்கிடையே, கடந்த அக்டோபர் மாதம் 209 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதில் 24 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீன சுவாச நோய் நிபுணர் ஜோங் நான்ஷான், “குளிர்காலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், வயதானவர்கள் மற்றும் பாதிக்கப்பட கூடியவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஷென்சென் நகரில் உள்ள மூன்றாவது மக்கள் மருத்துவமனையின் நிர்வாக தலைவர் லு ஹாங்சோ கூறுகையில், “வைரஸ் பிறழ்வுகளுக்கு உட்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் நோயை எதிர்த்துப் போராடும் பொது மக்களின் திறன் குறைந்து வருகிறது. ஏனெனில் காலப்போக்கில் மக்களின் நோய் எதிர்ப்பு அளவு குறைந்து வருகிறது,” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறிய போது, “குளிர்காலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும். மேலும், இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலம் அதிக இன்ப்ளூயன்ஸா பரவலுக்கு பெயர் பெற்றவை.

எனவே மக்கள் சாத்தியமான இணை நோய்த்தொற்றுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குளிர்காலத்தில் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவது அவசியமாகும்,” என்று கூறினார்.

Exit mobile version