Site icon Tamil News

ஹூதி படையினரின் தாக்குதலுக்குப் பதிலடி ; ஏமனின் முக்கியத் துறைமுகத்தில் இஸ்ரேல் தாக்குதல்

ஏமனில் ஹூதி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஹூதி படையினர் நடத்திய ஆளில்லா வானூர்தித் தாக்குதலைத் தொடர்ந்து, அந்த முக்கியத் துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்ரேல் முதன்முறையாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறினர்.

“இஸ்ரேலியக் குடிமக்களின் ரத்தத்திற்கு விலை கொடுக்க வேண்டும்,” எனக் கூறிய இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் யோவ் காலன்ட், இஸ்ரேலைத் தாக்க ஹூதி படையினர் துணிந்தால் அவர்களுக்கு எதிராகக் கூடுதல் தாக்குதல்கள் தொடரும் என எச்சரித்தார்.

காஸா போரில் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற ஈரான் ஆதரவுடைய ஆயுதமேந்திய படைகளுக்கு, ஹொடைடா துறைமுகத் தாக்குதல் ஓர் எச்சரிக்கையாக விளங்கும் என்றும் காலன்ட் சொன்னார்.

துறைமுகத் தாக்குதலில் 87 பேர் காயமுற்றதாக ஹூதி படைக்குச் சொந்தமான சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) கூறியது. அவர்களில் பெரும்பாலானோருக்குக் கடும் தீக்காயங்கள் ஏற்பட்டதாக அமைச்சு முன்னதாகச் சொன்னது.

டெல் அவிவ் நகரில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட வானூர்தித் தாக்குதலில் இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, “எங்களைத் தாக்கும் யாராக இருந்தாலும், கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்,” என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு எச்சரித்துள்ளார்.

ஆனால், ஹூதி உச்ச ஆட்சிக்குழு உறுப்பினர் அல் புகாய்தி, இஸ்ரேலியத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என மிரட்டியுள்ளார்.இதற்கிடையே, ஏமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றை தான் இடைமறித்ததாக இஸ்ரேலிய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

Exit mobile version