Site icon Tamil News

இலங்கையில் அடுத்த தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் முயற்சியில் ரணில் – சஜித்! நீடிக்கும் இழுபறி

ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

எனினும் இன்னமும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒரு பரந்த கூட்டணியாக ஒன்றிணைய வேண்டும் என்பது பொதுவான புரிதலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சிலர் இன்னமும் தனிப்பட்ட ஆதாயத்தையே நோக்குவதாகவும், நாட்டை முதன்மைப்படுத்தாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என முன்னாள் ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் பேச்சு வார்த்தை இடம்பெற்றதாக, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எனினும் இறுதி உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குச் செல்லப் போவதில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version