Tamil News

பண்ணைபுரத்தில் பவதாரிணி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி…

கல்லீரல் புற்றுநோய் காரணமாக, இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி, நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.

இலங்கையில் இருந்து விமானம் மூலம் உடல், நேற்று மதியம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

அங்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். பவதாரிணி உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதை தொடர்ந்து இறுதிச் சடங்கிற்காக ஆம்புலன்ஸ் மூலம் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. பண்ணைபுரத்திற்கு வந்த பவதாரிணி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து., பின்னணி பாடகி பவதாரணி இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இன்று காலை இளையராஜாவின் மகன்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மற்றும் குடும்பத்தினர் மதுரை விமான நிலையம் வந்தடைந்து சாலை மார்க்கமாக காரில் புறப்பட்ட சென்றனர்.

தொடர்ந்து, தனது மகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இளையராஜா தனி விமானத்தில் சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை வந்த இளையராஜா இங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு மகளின் இறுதிச் சடங்கு நடைபெறும் பண்ணையப்புரம் சென்றார்.

Exit mobile version