Site icon Tamil News

மகாராஷ்டிராவில் அரசியல் பதற்றம் ; BJP தோல்வி… ராஜினாமா முடிவெடுத்த துணை முதல்வர்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியின் படுதோல்விக்கு பொறுப்பேற்று துணை முதல்வர் பொறுப்பிலிருந்து விலகப்போவதாக அறிவித்த தேவேந்திர ஃபட்நாவிஸை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தேர்தல் முடிவில் பாஜக கூட்டணி பெரும் தோல்வியையும், காங்கிரஸ் கூட்டணி எதிர்பார்த்ததை விட அதிக இடங்களில் வெற்றியையும் பெற்றது. 48 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிராவில், 30 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும், எஞ்சிய இடங்களை பாஜக கூட்டணியும் வென்றன. தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று துணை முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்நாவிஸ் அறிவித்திருந்தார்.

இதனால் மாகாராஷ்டிர அரசியலில் பதற்றம் தொற்றியுள்ளது. துணை முதல்வர் பதவியை ஃபட்நாவிஸ் ராஜினாமா செய்வதாக அறிவித்ததற்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அடுத்த சில மணி நேரங்களில் எதிர்வினையாற்றி இருக்கிறார். அரசியலில் வெற்றியைப் போலவே தோல்வியும் தவிர்க்க முடியாதது என்றும், உடனடியாக துணை முதல்வரிடம் இது குறித்து பேசுவதாகவும் அறிவித்திருந்தார்.

ஃபட்நாவிஸின் இந்த ராஜினாமா அறிவிப்பை நாடகம் என்று காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. பாஜக தோல்விக்கு பொறுப்பேற்று மோடிதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் எதிர்க்கட்சிகளை பிளந்ததன் பலனை பாஜக அறுவடை செய்திருப்பதாகவும் காங்கிரஸ் சீற்றம் காட்டியுள்ளது. இதனிடையே பாஜக கூட்டணியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே – துணை முதல்வர் அஜித் பவார் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததும் இந்த தோல்விக்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Exit mobile version