Tamil News

’தயவுசெய்து நம்ப வேண்டாம்’ ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் முக்கிய அறிவிப்பு..!

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ’தயவுசெய்து இதை நம்ப வேண்டாம்’ என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் மற்றும் சிம்பு நடிக்க இருக்கும் திரைப்படம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ஒரு சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து இந்நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் செய்திகள் எவ்வகையிலும் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

எங்களது ராஜ கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version