Site icon Tamil News

இலங்கைக்கு வருடாந்தம் 05 மில்லியன் சுற்றுலா பயணிகளை அழைத்துவர திட்டம்!

வருடாந்தம் 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான இலக்கு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கையை பிரதான சுற்றுலா தலமாக கட்டியெழுப்புவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களுடன் நேற்று (17.08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரைகளை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது சுற்றுலாப் பயணிகளின் கவர்ச்சிகரமான மற்றும் வசதியான இடமாக இலங்கையை மாற்றுவதற்கான குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் தங்குமிட வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில், வரலாற்றுத் தோற்றத்துடன் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டிடங்கள் மற்றும் பங்களாக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் புதிய முதலீடுகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் வகையில் முதலீட்டு உட்கட்டமைப்பு கூட்டுத்தாபனத்தை நிறுவி கொள்கை தீர்மானங்களை மேற்கொள்வதற்கான சபையொன்றை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version