Site icon Tamil News

1.3 டன் சுறா துடுப்புகளை பறிமுதல் செய்த பெருவியன் பொலிஸார்

பெருவில் ஏறத்தாழ 1.3 டன் சுறா துடுப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சட்டவிரோதமாகப் பெறப்படும் இந்தச் சுறா துடுப்புகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

சீனா, ஜப்பான் போன்ற சில ஆசிய நாடுகளில் சுறா துடுப்புகளால் தயாரிக்கப்படும் உணவுவகைகளை விரும்பி சாப்பிடும் பலர் உள்ளனர்.இதன் காரணமாக சுறாக்கள் அவற்றின் துடுப்புகளுக்காகவே பேரளவில் பிடிக்கப்படுகின்றன.

துடுப்புகளை வெட்டி எடுத்துக்கொண்டு படுகாயம் அடைந்த சுறாக்கள் மீண்டும் கடலில் வீசப்படுகின்றன.இதனால் பல சுறாக்கள் மடிந்துவிட்டன.இதே நிலை நீடித்தால் சுறாக்கள் அறவே இல்லாமல் போகக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இத்தகைய சட்டவிரோத செயல்களைத் தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போதிலும் இந்தக் கொடுஞ்செயல் தொடர்கிறது.

பெருவில் பறிமுதல் செய்யப்பட்ட ஏறத்தாழ 1.3 டன் சுறா துடுப்புகள் சரக்குக் கிடங்கு ஒன்றில் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.அங்கிருந்து அவை ஆசிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து பெரு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Exit mobile version