Site icon Tamil News

அந்தமானில் இன்று அதிகாலையில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி!

அந்தமான் தீவில் கடந்த 10 நாட்களில் 2வது முறையாக இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த 1ம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கின. இதனால் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்த மக்கள் உடனடியாக தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் மறுநாள் 2ம் திகதி அந்தமான் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. கேம்ப்பெல் பே இல் என்ற இடத்தில் இருந்து 487 கிலோ மீட்டர் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் எதிரொலியாக மேற்கு வங்கத்தில் உள்ள அலிபுர்துவார் என்ற இடத்தில் 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ரிக்டர் அளவில் பதிவானதாக நில அதிர்வு கண்காணிப்பிற்கான தேசிய மையம் அறிவித்தது. இந்நிலையில் அந்தமான் தீவில் இன்று காலை 7.53 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. ஆனால், இதனால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்து, தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

Exit mobile version