Tamil News

முல்லைத்தீவில் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள நோயாளர்கள்

முல்லைத்தீவில் இடம்பெற்ற சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

இந்த விடயம் தொடர்பில் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.இதன்போது குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையிலேயே நேற்று காலை 6 மணிமுதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு பூராகவும் நடைபெறும் குறித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து முல்லைத்தீவிலும் , இன்றையதினம் இரண்டாவது நாளாக பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்ததோடு, இரத்த மாதிரிகளை பெறுதல் மற்றும் இரத்த பரிசோதனைகள், பற்சிகிச்சை பரிசோதனை என்பனவும் இன்று மேற்கொள்ளப்படாமையினால் பல நோயாளர்கள் திரும்பிச் சென்றதோடு மருந்துகளை பெறுவதிலும் பலர் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இதேவேளை தூர இடங்களில் இருந்து வந்த பல நோயாளர்கள் குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக திரும்பிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

Exit mobile version