Site icon Tamil News

செர்பியாவில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் – 8 போலீசார் காயம் : 38 பேர் கைது

செர்பியாவில் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டத்தின் போதும் அதற்குப் பிறகு எட்டு போலீசார் காயமடைந்தனர் மற்றும் 38 பேர் கைது செய்யப்பட்டதாக செர்பியாவின் காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்த 8 காவலர்களில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறை நிர்வாகத்தின் தலைவர் ஐவிகா இவ்கோவிச் தெரிவித்துள்ளார்.

செர்பியாவில் கடந்த 17ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியினர் பெருமளவில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதிபர் அலெக்சாண்டர் வுசிக் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

தேர்தல் முறைகேடு தொடர்பாக சர்வதேச பார்வையாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், செர்பியாவில் நடந்த தேர்தலை செல்லாது என அறிவிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. நேற்று நடந்த போராட்டத்தின்போது எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் பெல்கிரேடில் உள்ள அரசாங்க நிர்வாக கட்டிடமான சிட்டி ஹாலுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்தின் ஜன்னல்களை உடைத்தனர்.

இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், பெப்பர் ஸ்பிரே அடித்தும் விரட்டியடித்தனர்.

செர்பிய தேர்தலில், முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி, ஜனாதிபதி வுசிக்கின் செர்பிய முற்போக்கு கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைத்தது. செர்பிய முற்போக்கு கட்சி 47 சதவீத வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி (வன்முறைக்கு எதிரான செர்பியா) 23.56 சதவீத வாக்குகளும், செர்பிய சோசலிச கட்சி 6.56 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தன.

Exit mobile version