Tamil News

மீண்டும் அதிபராக வெற்றிபெற்ற நிக்கோலஸ் மதுரோ; வெனிசுலாவின் வெடித்த வன்முறை !

வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் நிக்கோலஸ் மதுரோ வெற்றிபெற்ற நிலையில், அவருக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, வெனிசுலா. இந்த நாட்டின் அதிபர் பதவிக்கு தேர்தல் கடந்த ஜூலை 28 வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோ (ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி) மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் எட்முண்டோ கோன்சலெஸ் (ஜனநாயகக் கட்சி) களம் கண்டார். வாக்கு எண்ணிக்கையின்போது நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மதுரோ, 51.2 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும், அவரை எதிர்த்து போட்டியிட்ட எட்முண்டோ கோன்சலெஸ் 44.2 சதவீத வாக்குகளை பெற்றதாவும் தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் நிகோலஸ் மதுரோவின் வெற்றியை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.

“தேசிய தேர்தல் கவுன்சிலின் முடிவுகள் மோசடியான ஒன்று. எங்களது வேட்பாளர் எட்முண்டோ கோன்சலெஸ், அதிபர் மதுரோவை தோற்கடித்ததற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. தங்களது வேட்பாளர் எட்மண்டோ கோன்சா 70 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். அவர்தான் நியாயமான முறையில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்” என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. மேலும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பையும் ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் கோன்சலெஸ் மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவின் வெற்றியை எதிர்த்து தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரோவுக்கு எதிராக கோஷமிட்டனர்.

Venezuelans take to streets to protest Maduro's election victory

முகமூடி அணிந்த இளைஞர்கள் சிலர் கம்பங்களில் தொங்க விடப்பட்டிருந்த மதுரோவின் பிரசார சுவரொட்டிகளைக் கிழித்து எறிந்தனர். பால்கன் மாநிலத்தில் முன்னாள் அதிபர் ஹ்யூகோ சாவேசின் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் இடித்தனர். சில போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை நோக்கிச் சென்றனர். அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போது, பொலிஸார் மற்றும் போராட்டக்காரர்கள் ஆகிய இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சில வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர். வன்முறை காரணமாக வெனிசுலாவில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த வன்முறையின்போது 50 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வன்முறை, கடந்த 2019ஆம் ஆண்டை நினைவூட்டுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையே அதிபர் நிகோலஸ் மதுரோவின் வெற்றியை அமெரிக்கா, சில தென் அமெரிக்க நாடுகள் ஏற்கவில்லை. அதேவேளையில் மதுரோவுக்கு ரஷ்யா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

Exit mobile version