Tamil News

இரட்டை குழந்தைகளுக்கு தாயான பின் சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்திய நயன்தாரா

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ள ஜவான் படத்திற்காக பெரும் தொகையை சம்பளமாக வாங்கி உள்ளாராம்.

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. சரத்குமாரின் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர் ஆரம்ப காலகட்டத்தில் அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பாப்புலர் ஆனார்.

பின்னர் ஒரு கட்டத்தில் கதையின் நாயகியாக உருவெடுத்த நயன், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து அதில் மாபெரும் வெற்றியும் கண்டார்.

நடிகை நயன்தாராவுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. அவர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நான்கே மாதத்தில் இந்த ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. வாடகைத் தாய் முறையில் அவர்கள் இக்குழந்தைகளை பெற்றுக்கொண்டனர்.

குழந்தை பிறந்த பின்னும் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நயன்தாராவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. இதுவரை தென்னிந்திய திரையுலகில் மட்டும் நடித்து வந்த நயன் தற்போது பாலிவுட்டிலும் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளார் நயன்தாரா.

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன். இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக மிரட்டி இருக்கிறாராம் நயன். சமீபத்தில் வெளியான முன்னோட்ட வீடியோவிலும் நயனின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், ஜவான் படத்திற்காக நயன்தாரா வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்காக அவர் ரூ.10 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம். இப்படத்திற்கு முன்னர் வரை ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வாங்கி வந்த நயன்தாரா, ஜவான் படத்தின் மூலம் தன் மார்க்கெட் உயரும் என்பதை கருத்தில் கொண்டு அப்படத்திற்காக டபுள் மடங்கு சம்பளம் வாங்கி உள்ளாராம். ஜவான் படத்திற்கு பின்னர் அவர் கமிட்டான படங்களுக்கும் அவருக்கு ரூ.10 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version