Site icon Tamil News

நளின் எம்.பியின் வாகனம் மோதி விபத்து – உயிரிழந்தும் பலரை வாழவைத்த இளைஞர்

பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியில் மோதியதில் 08 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்று (11) உயிரிழந்துள்ளார்.

திஹாரிய, கல்கெடிஹேன பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஷனுக ரவிந்து என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த இளைஞன் மோட்டார் சைக்கிள் விற்பனை தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு கடுமையாகப் போராடிய இளைஞரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் முடிவு செய்ததையடுத்து, அந்த இளைஞனின் பாதுகாவலர்கள் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

விபத்திற்கு முன்னரே ஷனுகா ரவிந்துவின் விருப்பத்தின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 03ஆம் திகதி காலை ஷனுக ரவிந்து விபத்துக்குள்ளானார்.

கொழும்பு பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

அதன்படி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இளைஞனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் விபத்து இடம்பெற்ற நேரம் முதல் அவர் சுயநினைவின்றி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியின் சாரதியை நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கைது செய்துள்ளனர்.

Exit mobile version