Site icon Tamil News

பிலிப்பைன்ஸில் காணாமல் போன 10 வயது சிறுமி… வீட்டு சமையலறையிலிருந்து சடலமாக மீட்பு !

பிலிப்பீன்சின் குவெஸோன் மாநிலத்தில் தமது 10 வயது மகளைக் காணவில்லை என்று தாயார் ஒருவர் செப்டம்பர் 9ஆம் திகதி காவல்துறையிடம் புகார் அளித்ததை அடுத்து, சிறுமியின் உடல் ஒரு வீட்டுச் சமையலறையின் கழுவுத் தொட்டி ஒன்றில் சட்டி, பானைகளால் மூடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன தினத்தன்று சிறுமியை சந்தேக நபரின் வீட்டுக்கு மாலை 5 மணியளவில் அனுப்பி வைத்தபோதுதான் அவரைக் கடைசியாகப் பார்த்ததாக அவளின் பாட்டி கூறினார்.இருப்பினும், மாலை 7 மணி ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் தாயார் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

புகார் கிடைத்ததும் சிறுமி கடைசியாகக் காணப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் காவல்துறையினர் உடனடியாகப் பார்வையிட்டனர்.சந்தேக நபர் வாடகைக்கு இருந்த வீட்டைத் தாண்டிச் சிறுமி செல்வதாகவும் அதையடுத்து சிறுமி காணாமல் போனதாகவும் பதிவுகளின்வழி கண்டறியப்பட்டது.

இந்நிலையில், சந்தேக நபரது வீட்டை சோதனையிட்டபோது சிறுமியின் உடல் அவ்வீட்டுச் சமையலறைக் கழுவு தொட்டியில் சட்டி, பானைகளால் மறைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுமியின் உடலுக்கு அருகே நீட்டிக்கப்படக்கூடிய மின்வடம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. அதைக் கொண்டு சிறுமியின் கழுத்தை நெரித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சிறுமியின் மரணத்துக்கான காரணத்தையும் பாலியல் துன்புறுத்தலுக்கான அறிகுறிகளையும் கண்டறிய அவரின் உடல், உடற்கூறு ஆய்வுச் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மோட்டார்சைக்கிளில் அண்டை மாநிலத்துக்குத் தப்பியோடியதாகவும் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது

Exit mobile version