Site icon Tamil News

உலகை அச்சுறுத்தும் மெர்ஸ் கொரோனா – ஒட்டகத்தில் இருந்து பரவுவதாக தகவல்

மெர்ஸ் கோரோனா (MERS-CoV) வைரஸ் தொற்றினால் இதுவரை 2,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 936 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) திங்கள்கிழமை இரவு அபுதாபியில் ஆபத்தான சுவாசப் பிரச்சினையை ஏற்படுத்தும் மெர்ஸ் கொரோனா வைரஸ் (MERS-CoV) பரவி வருவதை உறுதி செய்துள்ளது.

முதல் முறையாக அல் ஐன் நகரில் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 28 வயது நபர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த நபருடன் தொடர்பில் இருந்த 108 பேரை அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் சோதித்துள்ளனர். ஆனால் இதுவரை இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகள் எதுவும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் தற்போதைய நிலை குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

மெர்ஸ் கோரோனா வைரஸ் ஒட்டகங்கள் மூலம் பரவுகிறது என்று கருதப்படும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ள நபர் ஒட்டங்கங்களுடன் தொடர்பு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் பரவத் தொடங்கியதால் மெர்ஸ் கொரோனா வைரஸ் Middle East Respiratory Syndrome Coronavirus (MERS-CoV) என்று அழைக்கப்படுகிறது. இது முதன்முதலில் சவுதி அரேபியாவில் 2012 இல் கண்டறியப்பட்டது.

அல்ஜீரியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், சீனா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஈரான், இத்தாலி, ஜோர்டான், குவைத், லெபனான், மலேசியா, நெதர்லாந்து, ஓமன், பிலிப்பைன்ஸ், கத்தார், கொரியா குடியரசு, பிரிட்டன், சவுதி அரேபியா,மற்றும் ஏமன் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள மக்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version