Site icon Tamil News

இலங்கை இயக்குநருடன் கைகோர்த்த மணிரத்னம்!

இலங்கை சினிமாவின் உலக முகமாக அறியப்படக்கூடியவர் இயக்குநர் பிரசன்ன விதானகே. இவரது திரைப்படங்கள் இலங்கை போர் மற்றும் அந்நாட்டு மக்களின் பிரச்சினைகளை துணிந்து பேசக்கூடிய படங்களாக அமைந்துள்ளன. தமிழருக்கும், சிங்களருக்கும் இடையே நடந்த பிரச்சினைகளை நடுநிலையாக அணுகி அவர் எடுத்த ‘டெத் ஆன் எ ஃபுல் மூன் டே’ திரைப்படம் போரைக் கையிலெடுக்கும் நாடுகளின் மனசாட்சியை உலுக்கக்கூடிய ஒன்றாக அமைந்தது. தொடர்ந்து, ’வித் யு, வித்தவுட் யு’ என்ற படமும் தமிழர், சிங்கள பிரச்சினையை அடிப்படையாக வைத்தே இயக்கியிருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் எழுதி இயக்கியிருக்கும் புதிய படம் பேரடைஸ். இந்த படத்தில் மலையாள நடிகர்களான ரோஷன் மேத்தீவ், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள, இந்தி சினிமாவில் புகழ்பெற்ற ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர்பிரசாத் எடிட் செய்துள்ளார். படத்தினை நியூட்டன் சினிமா என்ற தமிழ்ப்படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தைப் பார்த்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம் அவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் மூலமாக அதை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளார்.

இலங்கையில் போருக்குப் பிறகு பொருளாதார வீழ்ச்சியால் தள்ளாடும் இலங்கைக்கு சுற்றுலா வரும் ஒரு இந்திய தம்பதியைப் பற்றிய கதை என்று விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் தென்கொரியாவின் புகழ்பெற்ற பூஸன் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான கிம் ஜிஜோக் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் வெளியாக தமிழ் அமைப்புகள் அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version