Tamil News

லக்னோ- மனைவி, 2 குழந்தைகள் கொலை: 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று அவர்களின் உடல்களோடு மூன்று நாட்களாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்தவர் ராம் லகான்(32). இவருக்கும் ஜோதி என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பாயல்(6), ஆனந்த்(3) என்ற குழந்தைகள் இருந்தனர். மனைவியின் நடத்தையில் ராம் லகானுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மனைவியின் செல்போனை கேட்டு ராம் லகான் சண்டை போட்டு வந்தார்.

இந்த நிலையில், ராம் லகான் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுதொடர்பாக ராம் லகானிடம் கேட்ட அக்கம் பக்கத்தினர் உங்கள் மனைவி, குழந்தைகள் எனக்கேட்டுள்ளனர். அதற்கு, அவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட ஊருக்குச் சென்று விட்டதாக கூறியுள்ளார். ஆனால், துர்நாற்றம் குறித்து அவர் பதில் சொல்லாததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

UP: Lucknow Man Kills Wife, 2 Children Over Suspicion Of Affair, Sleeps  Beside Their Bodies For 3 Days

இதையடுத்து விரைந்து வந்த பொலிஸார், ராம் லகானின் வீட்டைச் சோதனையிட்டனர். அப்போது சாக்கு மூட்டைகளில் ராம் லகானின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பிணமாக இருந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார், ராம் லகானை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதைக் கேட்டு பொலிஸார் ஆடிப்போனார்கள்.

இதுகுறித்து காவல் துணை ஆணையர் (தெற்கு) டி. எஸ். சிங் கூறுகையில்,” கடந்த 28ம் திகதி நள்ளிரவு ராம் லகானுக்கும், அவரது மனைவி ஜோதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த லகான், குழந்தைகள் கண்முன்பு ஜோதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இதன்பின் அவரது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்தார். அவர்களது மூன்று பேரின் உடல்களை அப்புறப்படுத்த வழி தெரியாமல் சாக்குமூட்டைகளில் கட்டி வைத்துள்ளார்.

மறுநாள் ஒன்றும் நடக்காதது போல வேலைக்குச் சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். மூன்று இரவுகளாக இறந்தவர்களின் உடல்களுடன் ராம் லகான் வாழ்ந்து வந்துள்ளார். மூன்று பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார். இதையடுத்து மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொன்ற ராம் லகானை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version