Tamil News

காதல் விவகாரம்; +1 மாணவியை பெற்றோரே படுகொலை செய்த கொடூரம்!

ஓசூர் அருகே காதலித்த குற்றத்திற்காக பதினொன்றாம் வகுப்பு மாணவியை அவரது பெற்றோர்கள் நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் ஸ்பூர்த்தி (16), பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 14ம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் மாணவி பிணமாக மிதந்ததை அங்கு சென்ற சிலர் பார்த்துவிட்டு இதுகுறித்து பாகலூர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அங்கு சென்ற பொலிஸார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை: போதைக்கு அடிமையான மகனை கொலை செய்த தாய்... விசாரணையில் அம்பலமான  பகீர் உண்மை! | Chennai Mother beat her son to death, investigation reveals

மேலும் இதுகுறித்த விசாரணையை பொலிஸார் நடத்தினர். அவர்களின் விசாரணையில் மாணவியை அவரது பெற்றோர்களே கொலை செய்திருப்பது தெரிய வந்தது. மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் மகளை கண்டித்துள்ளனர். ஆனால் மாணவி காதலை கைவிட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மகளை தாக்கி, ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதும், பெற்றோர் புகாரின்பேரில் வீடு திரும்பியதும் அவர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போது சிவா, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து மாணவியின் தந்தை பிரகாஷ், தாயார் காமாட்சி ஆகியோரிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version