Tamil News

நானும் லோகேஷும் சீக்கிரம் வருகிறோம்… ‘கைதி 2’தொடர்பில் அப்டேட் கொடுத்த கார்த்தி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இன்று சென்னையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி, ‘கைதி 2’ எப்போது வரும் என்பது குறித்து பேசினார்.

’மாநகரம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அவரது இரண்டாவது படம் தான் கார்த்தி நடித்த ‘கைதி’. இதில் டில்லி என்ற கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்தார். இந்தப் படம் வெளியான சமயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்ததா என்பது சந்தேகம்தான். ஏனெனில், தீபாவளி வெளியீடாக வந்த இந்தப் படத்தோடு விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படமும் வெளியானது.

அதனால் தீபாவளி கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ‘பிகில்’ பார்க்க கிளம்பினர். ஆனால், ‘கைதி’ சத்தமில்லாமல் சாதித்தது. படம் பார்த்தவர்கள் கொண்டாட, அடுத்தடுத்த நாட்களில் இந்தப் படத்திற்கு திரையரங்குகளில் கூட்டம் கூடியது. வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆனாலும், ’கைதி’ படத்தின் அடுத்த பாகம் குறித்தான எதிர்பார்ப்பில் ரசிகர்கள் கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கிறார்கள்.

Karthi confirms Kaithi 2 to begin filming next year, Lokesh Kanagaraj to  direct - Hindustan Times

லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஆங்காங்கே ‘கைதி’யை அவர் தனது படங்களில் இணைத்தாலும் தனிப்படமாக ‘கைதி 2’ எப்போது வரும் என்பதுதான் ரசிகர்களின் கேள்வி. கடந்த வருடம் இந்தக் கேள்வியை எதிர்கொள்ளும் போதெல்லாம் நடிகர் கார்த்தி, “இந்த வருடம் ஆரம்பிக்கிறோம்” என்று சொன்னார். இப்போது அந்தப் பதில் அடுத்த வருடமாக மாறி இருக்கிறது.

போரூரில் இன்று தனியார் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட கார்த்தி, ”டில்லி சீக்கிரம் திரும்பி வருவான். அடுத்த வருடம் நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். நானும் இப்போது ஒப்பந்தம் ஆகியிருக்கும் படங்களை முடித்து விடுவேன். லோகேஷூம் ‘தலைவர் 171’ படத்தை முடித்துவிட்டு கைதிக்குத்தான் வருவார் என்று நினைக்கிறேன். சீக்கிரம் வருகிறோம்” என்று அப்டேட் கொடுத்தார்.

Exit mobile version