Tamil News

கைகளில் கோப்பைகளை ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்த கால்நடை பண்ணையாளர்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைதந்த நிலையில் மட்டக்களப்பு சித்தாண்டியில் பண்ணையாளர்கள் கைகளில் கோப்பைகளை ஏந்தி போராட்டம் நடாத்தியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக மட்டகளப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது கடந்த 23 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் தனது குடும்பத்தினருடன், வீதிகளில் திரண்டு,  கைகளில் கோப்பைகளை ஏந்தி தமது நிலங்ளை தங்களுக்கு வழங்குமாறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாஸ்,தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர்  ஆதரவு வழங்கியுள்ளனர்.

போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை சந்திவெளி பொலிஸார் மற்றும் ஏறாவூர் பிரதேச பிரதி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக போராட்டத்திற்கு எதிரான தடையுத்தரவு வழங்க முற்பட்டபோது  பொலிஸாருக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் நீதிமன்ற கட்டளையினை இதுவரையில் நடைமுறைப்படுத்தாத பொலிஸார் அமைதியான முறையில் போராடிவரும் தமக்கு தடையுத்தரவு வழங்குவதா என கேள்வியெழுப்பினார்கள்.

அதனை தொடர்ந்து கால்பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்பான நீதிமன்ற கட்டளை வாசிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த சுவரில் பொலிஸாரினால் நீதிமன்ற கட்டளை ஒட்டப்பட்டது.

குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் அமைதியான முறையில் பண்ணையாளர்கள் தமது போராட்டத்தினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version