Tamil News

‘மாலத்தீவை விட்டு இந்திய ராணுவம் வெளியேறட்டும்…’புதிய அதிபர் அழுத்தம்

நவம்பர் மாத்த்தின் மத்தியில் மாலத்தீவு தேசத்தின் புதிய அதிபராக பதவியேற்க இருக்கும் முகமது முய்சு, ’மாலத்தீவை விட்டு இந்திய ராணுவம் வெளியேறட்டும்…’ என ஒரு தொலைக்காட்சி பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் நடந்து முடிந்த மாலத்தீவு தேர்தலில் நடப்பு அதிபரான இப்ராஹிம் முகமது சோலிக்கும், எதிர்க்கட்சியின் முகமது முய்சுவுக்கும் கடும் போட்டி நிலவியது. இப்ராஹிம் முகமது சோலி இந்திய ஆதரவாளர் எனில், முகமது முய்சு சீனாவின் ஆதரவாளர்! தேர்தல் பிரச்சாரத்தின் போதே, ’மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்’ என்று முகமது முய்சு பிரச்சாரம் செய்தார்.

இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டமான மாலத்தீவில் ஆதிக்கம் செலுத்துவதில் இந்தியா – சீனா இடையே போட்டி நிலவியது. இதுவரை இந்தியா கையே அங்கே ஓங்கி வந்தது. அதிக கடன்களை அள்ளித்தந்து இந்தியாவின் அண்டை நாடுகள் ஒவ்வொன்றாக வளைத்து வரும் சீனா, இலங்கையை தொடர்ந்து மாலத்தீவிலும் கண் வைத்தது.

சீனாவுக்கு இடம் கொடாது, இப்ராஹிம் முகமது சோலி ஆட்சி காலத்தில் மாலத்தீவுக்கு சுமார் 16,000 கோடி ரூபாய் வரையிலான உதவிகளை இந்தியா வாரி வழங்கியது. சீனாவும் மாலத்தீவின் உள்கட்டமைப்புக்கான கடனுதவி மற்றும் வளர்ச்சி திட்டங்களில் போட்டியிட்டு பங்கேற்றது.

The Maldives Crisis: Will India Intervene? – The Diplomat

தேர்தல் முடிவில் முகமது முய்சு வெற்றி பெற்றதில், சீனாவுக்கு ஆதரவாக காட்சிகள் மாற்றம் கண்டிருக்கின்றன. இந்திய ராணுவத்தால் மாலத்தீவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முகமது முய்சு பேச ஆரம்பித்தார். இந்திய ராணுவத்தினர் மாலத்தீவிலிருந்து வெளியேற வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த நடவடிக்கை அனைத்தும் மாலத்தீவு மக்களின் நன்மைக்காக என்றே முகமது முய்சு தெரிவித்திருக்கிறார்.

மேலும், மாலத்தீவில் காலியாகும் இந்திய ராணுவத்தின் இடத்தில் சீனா உட்பட வேறெந்த ராணுவமும் அமர்த்தப்படாது என முகமது முய்சு தற்போது உறுதி தெரிவித்திருக்கிறார். ஆனால் அங்கே ஏற்கனவே சீனா தனது ஆக்கிரமிப்பை தொடங்கிவிட்டது. புதிய அதிபரை வசீகரிக்கும் வகையிலான கடனுதவி மற்றும் கட்டமைப்பு திட்டங்களை அமல்படுத்த காத்திருக்கிறது.

இவை அனைத்தும் இந்தியாவுக்கு பின்னடைவாக அமையக்கூடும். மாலத்தீவில் இந்திய ராணுவத்தின் துருப்புகள் சேவையாற்றுவதன் மூலம் அந்த நாட்டின் பாதுகாப்பு மட்டுமன்றி, பிராந்தியத்தில் இந்தியாவுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய முடிந்தது. இனி சீனாவின் ஆதிக்கம் அங்கே அதிகரிப்பது இந்தியாவுக்கு புதிய சவாலாக மாறக்கூடும்.

Exit mobile version