Tamil News

“நான் கெட்ட மனிதனாக நடிக்கவே விரும்புவேன்” – கமல் பேச்சு

பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் லீட் ரோலில் நடிக்கும் திரைப்படம் கல்கி 2898 AD. இந்த திரைப்படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கியிருக்கிறார்.

பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உலகநாயகனுக்கு கல்கி 2898 AD படத்தின் முதல் டிக்கெட் வழங்கப்பட்டது.

இதில், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் சயின்ஸ் பிக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள கல்கி திரைப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘கல்கி 2898 AD’ படத்தில், மெகாஸ்டார் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா கேரக்டரில் நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள நெமாவார், நர்மதா காட் என்ற இடத்தில் நடைபெற்றது.

இப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை அவரது கதாபாத்திரம் பற்றிய எந்த தகவலையும் படக்குழு வெளியிடவில்லை.

இதையடுத்து பேசிய கமலஹாசன், இந்த படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரம் கொடுத்ததற்காக இயக்குநரை பாராட்டினார். மேலும், நான் எப்போதும் கெட்ட மனிதனாக நடிக்கவே விரும்புவேன். ஏனென்றால் கெட்ட மனிதர்கள் எல்லா நல்ல காரியங்களையும் படத்தில் செய்வார்கள் என்றார்.

இந்த படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த இயக்குநருக்கு நன்றி, அது ஒரு அற்புதமான அனுபவமாக மாறி உள்ளது என்றார். இதையடுத்து இந்த மாதம் 27ந் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் முதல் டிக்கெட் கமலஹாசனுக்கு வழங்கப்பட்டது.

Exit mobile version