Tamil News

காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 71 பேர் பலி!

கான் யூனிஸுக்கு மேற்கே உள்ள அல்-மவாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 289 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸாசா நகரில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்களை இலக்கு வைத்து இஸ்ரேலியப் படைகள் வேண்டுமென்றே தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அங்கு, நகரின் தால் அல்-ஹவா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு நூற்றுக்கணக்கான உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கான் யூனிஸுக்கு மேற்கே உள்ள அல்-மவாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 289 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஹமாஸ் தரப்பில், கான் யூனிஸில் நடந்த இந்த கொடூரமான படுகொலையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், இது காஸா பகுதியில் நிகழ்த்தப்படும் குற்றங்கள் மற்றும் படுகொலைகளின் ஆபத்தான அதிகரிப்பு ஆகும். இந்தப் படுகொலைகள் போர் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதது என தெரிவித்துள்ளது.

Officials say 71 killed, hundreds injured in Gaza refugee camp strike

கடந்த ஆண்டு போர் ஆரம்பமானது முதல் காசாவின் பல்வேறு பகுதிகளில் இடம்பெயர்ந்ததன் காரணமாக 71,338 பேர் ஹெபடைடிஸ் (கல்லீரல் அலர்ஜி ) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் ராணுவம் அடிப்படை பொருட்களை கூட காஸாவில் அனுமதிக்காத நிலையில், காஸாவில் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 350,000 பேர் பெரும் ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

அக்டோபர் 7 முதல் காஸா மீதான இஸ்ரேலின் போரில் 38,443 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 88,481 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என மதிப்பிடப்பட்டுள்ளது; மேலும் பலர் காஸாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version