Site icon Tamil News

பிணைக்கைதிகளுக்கு போதை மருந்து புகட்டும் ஹமாஸ்: பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ள இஸ்ரேல்

இஸ்ரேலிய பிணைக்கைதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும், விடுவிக்கப்படும்போது அவர்கள் மகிழ்வாக தோன்றச் செய்யவும் போதை மருந்தினை ஹமாஸ் புகட்டுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி உள்ளது.

”ஹமாஸ் வசமிருக்கும் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கு முன்பாக சிறைப்பிடிக்கப்பட்டவர்களுக்கு குளோனாசெபம் என்னும் போதை போதை மருந்தினை புகட்டி அனுப்புகிறது. இதனால் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்படும்போது, மிகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் அவர்கள் தோற்றமளிக்கின்றனர்” என்று இஸ்ரேல் சுகாதார அமைச்சகத்தின் மருத்துவப் பிரிவின் தலைவரான ஹாகர் மிஸ்ராஹி குற்றம்சாட்டி உள்ளார்.

இதன் மூலம் இஸ்ரேல் – ஹமாஸ் மோதலை கண்காணித்து வரும் சர்வதேச சமூகத்தின் பார்வையில் ஹமாஸ் நற்பெயர் பெற முயற்சிக்கிறது. பிணைக்கைதிகள் ஒப்படைப்பின் போது அவர்கள் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிருப்தி மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்கும் வாய்ப்புகளை இதன் மூலம் ஹமாஸ் தவிர்க்க முயற்சிக்கிறது. மேலும், இந்த போதை மருந்தின் பாதிப்புகள், பக்கவிளைவுகள் குறித்தும் இஸ்ரேல் கவலை தெரிவித்திருக்கிறது. விடுவிப்பின்போது மட்டுமன்றி, பிணைக்கைதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகவும், அவர்களை சதா போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கி வைத்திருப்பதாகவும் ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது.

பொதுவாக சில வகையான வலிப்பு மற்றும் பீதி நோய்களுக்கு சிகிச்சையளிக்க குளோனாசெபம், ஒரு வகை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதையே போதைக்காக வாய்வழியாக புகட்டும்போது, நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதித்து அமைதி மற்றும் மகிழ்வான உணர்வை செயற்கையாக ஏற்படுத்துகிறது. இதன் பக்க விளைவுகளில் தூக்கம், தலைச்சுற்றல், சார்பு மனநிலை ஆகியவற்றில் தொடங்கி சிக்கலான பாதிப்புகளும் எழக்கூடும்.

பிணைக்கைதிகளுக்கு நடத்தப்பட்ட உடற்பரிசோதனை மற்றும் அவர்கள் அளித்த சாட்சியங்களில் இருந்து இஸ்ரேல் இதனை கண்டறிந்திருப்பதாக தெரிகிறது. எனினும் தங்களது ஆய்வின் பின்னணி குறித்து இஸ்ரேல் முழுமையான விளக்கங்களைத் தரவில்லை.

தற்காலிக போர்நிறுத்தத்தின் போது பரஸ்பரம் கைதிகள் பரிமாற்றத்தின் மூலம் 23 தாய்லாந்து நாட்டவர், ஒரு பிலிப்பைன்ஸ் குடிமகன் மற்றும் 81 இஸ்ரேலியர்களை இதுவரை ஹமாஸ் விடுவித்திருக்கிறது. இன்னமும் ஹமாஸ் வசம் இஸ்ரேலின் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் வெளிநாட்டினர் என 137 பேர் காசாவில் சிக்கியுள்ளனர்.

Exit mobile version