Site icon Tamil News

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற அயர்லாந்து அணி

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களைச் சேர்த்தது.

சிறப்பாக விளையாடிய லியா பால் 81 ரன்களை விளாசினார். இலங்கை அணி தரப்பில் கவிஷா தில்ஹாரி, அச்சினி குலசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் விஷ்மி குணரத்னே, கேப்டன் சமாரி அத்தபத்து ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்ஷிதா சமரவிக்ரமா தனது முதல் ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

ஆனால் அதன்பின் 11 பவுண்டரிகளுடன் 105 ரன்களைச் சேர்த்த நிலையில் ஹர்ஷிதா சமரவிக்ரமாவும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹாசினி பெரேரா 14, சஞ்சினி நிசம்சாலா, சுகந்திகா குமாரி, அச்சினி குலசூரிய, அதேஷிகா பிரபோதனி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இதனால் இலங்கை அணி 48 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து அணி தரப்பில் அர்லீன் கெல்லி 3 விக்கெட்டுகளையும், ஜேன் மாகுவேர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் அயர்லாந்து அணியானது 15 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த லியா பால் ஆட்டநாயகி விருதை வென்றார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் முதல் முறையாக இலங்கைக்கு எதிராக அயர்லாந்து அணி இருதரப்பு தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

Exit mobile version