Site icon Tamil News

IPL Match 30 – இறுதிவரை போராடி தோல்வியடைந்த பெங்களூரு அணி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 30வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சன்ரைசர்ஸ் ஐதரபாத் மோதின. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

இதையடுத்து, ஐதராபாத் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். அபிஷேக் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஹெண்ட்ரிச் கிளாசனுடன் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் பெங்களூரு பந்து வீச்சை சிதறடித்தார். அவர் 39 பந்துகளில் சதம் விளாசினார்.

ஹெட் 41 பந்துகளில் 9 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் உள்பட 102 ரன்கள் குவித்திருந்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். ஆனால் மறுமுனையில் ஹெண்ட்ரிச் கிளாசனும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 31 பந்துகளில் 2 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் உள்பட 67 ரன்கள் குவித்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.

அடுத்து களமிறங்கிய மார்க்ரம், அப்துல் சமத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி கட்டத்தில் இருவரும் பெங்களூரு பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இறுதியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்கள் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் குவித்தது. மார்க்ரம் 17 பந்துகளில் 32 ரன்களுடனும், சமத் 10 பந்துகளில் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

287 ரன்கள் குவித்ததன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிர ரன்கள் குவித்த அணி தங்கள் முந்தையை சாதனையை ஐதராபாத் மீண்டும் தகர்த்துள்ளது. இதையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பாப் டு பிளெசிசும், விராட் கோலியும் களமிறங்கினர். இமாலய இலக்கு என்பதால், இருவரும் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டினர். இருவரும் பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்கவிட்டனர். இவர்கள் இருவரும் ஆடிய விதம், எதிரணியை மிரளவைத்தது.

பெங்களூரு அணி 6.2 ஓவர்களில் 80 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. விராட் கோலி 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வில் ஜாக்ஸ் துரதிர்ஷ்டவசமாக 7 ரன்னில் ரன் அவுட் ஆனார். ரஜத் படிதார் 9 ரன்னும், சவுரவ் சவுகான் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடந்து அதிரடி காட்டி வந்த டு பிளெசிஸ், தன் பங்குக்கு 28 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்த 42 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

பெங்களூரு அணியின் போராட்டம் அவ்வளவுதான் என்று ரசிகர்கள் நினைத்த போதுதான், களத்திற்குள் தினேஷ் கார்த்திக் வந்தார். தொடர்ந்து அதிரடி காட்டி, பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட அவர், ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச்சென்றார்.

தினேஷ் கார்த்திக் தன்னால் முடிந்தவரை போராடி அணியை இமாலய இலக்குக்கு அருகில் கொண்டு சென்றார். அவர் 35 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றிபெற்றது. ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Exit mobile version