நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் – கொல்கத்தா மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா – டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். தொடக்கமே ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
அபிஷேக் 2 ரன்னிலும் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அதனை தொடர்ந்து வந்த திருப்பாதி முதலில் பவுண்டரிகளை விளாசினார். பின்னர் சொதப்பிய அவர் 13 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து மார்க்ரம் மற்றும் நிதிஷ் ரெட்டி ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிதிஷ் ரெட்டி 13 ரன்னிலும் மார்க்ரம் 20 ரன்னிலும் அவுட் ஆகினர்.
அடுத்து வந்த ஷபாஷ் அகமது 8 ரன்னிலும் அப்தும் சமாத் 4 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இதனால் 77 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி திணறியது. ஒரே நம்பிக்கையாக இருந்த கிளாசனும் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஒற்றை ஆளாக போராடிய கேப்டன் கம்மின்ஸ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 3 விக்கெட்டும் ஸ்டார்க், ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.