Site icon Tamil News

சிங்கப்பூரில் பரிதாபமாக உயிரிழந்த தமிழ் இளைஞன் தொடர்பில் வெளிவரும் தகவல்

சிங்கப்பூரில் உள்ள தஞ்சோங் பகாரில் உள்ள ஃபியுஜி செராக்ஸ் டவர்ஸ் கட்டிடம் இடிக்கப்பட்ட போது, அதன் ஒரு பகுதியில் இருந்த 10 மீட்டர் நீளமும், 3.8 மீட்டர் உயரமும் உடைய சுவர் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.

கடந்த வியாழன்கிழமை மதியம் 02.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

இந்த விபத்தில், பணியில் இருந்த 20- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 20 வயதான வினோத் குமாரை பேரிடர் மீட்புப் படையினர், தீவிரமாகத் தேடி வந்த நிலையில் சுமார் ஆறு மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.

அந்த இளைஞருக்கு சக ஊழியர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அதேபோல், சிங்கப்பூர் அமைச்சர்களும் ஆழந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவரது தாய், தந்தை கூலித் தொழிலாளிகள் ஆவர். ஏழ்மையில் பிறந்த வினோத் குமார், தனது பள்ளிப்படிப்பை சொந்த கிராமத்திலேயே படித்தார்.

பின்னர், உயர்கல்வியை திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரபல பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து மெக்கானிக்கல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். வெற்றிகரமாக தனது படிப்பை முடித்த வினோத் குமார், குடும்ப ஏழ்மையைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல முடிவெடுத்தார்.

வினோத் குமாரின் நெருங்கிய உறவினர்கள் பலரும், சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த நிலையில், அவரின் உதவியை நாடினார். அவர்களும் வேலை வாங்கித் தருவதாக வினோத் குமாருக்கு உறுதியளித்தனர். இதற்காக, சுமார் 2.5 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. அவரது உறவினரான ராஜமாணிக்கம் சுமார் 2.5 லட்சத்தைக் கடன் வாங்கி, சிங்கப்பூருக்கு அழைத்து வந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 2022- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்முறையாக, சிங்கப்பூருக்கு வந்த வினோத் குமார் கட்டுமானத் துறையில் பணியில் சேர்ந்தார். ‘அய்க் சன் டிமாலிஷன் அண்ட் இன்ஜினியரிங்’ நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அதில் கிடைத்த வருமானத்தைச் சேமித்து, தனக்காக ராஜமாணிக்கம் பெற்ற கடனில் 75% அடைத்துள்ளனர்.

தனது சொந்த வருமானத்தில் உயர் ரக இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும்; தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என கடுமையாக உழைத்து வந்த வினோத் குமார், எதிர்பாராத விதமாக கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு, ராஜமாணிக்கம் வினோத் குமாரின் உடலைப் பெற்று கொண்டடார். இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு, வினோத் குமாரின் உடல் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பல லட்சியங்களுடன் சிங்கப்பூருக்கு வந்த வினோத் குமார் உயிரிழந்தது சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version