Tamil News

பிரதமர் ரிஷி சுனக்குடன் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு…

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கை நேற்று சந்தித்து இரு நாடுகளிடையே உள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசித்தார்.

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இங்கிலாந்துக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரிட்டனுக்கு 22 ஆண்டுகளுக்குப் பிறகுச் செல்லும் பயணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை ராஜ்நாத் சிங் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் இடம்பெற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தடையில்லாத வர்த்தக ஒப்பந்த (எஃப்டிஏ) முன்னேற்றம் தொடர்பாகவும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரிடன் - இந்தியா பாதுகாப்புத் துறை உயர்மட்ட ஆலோசனை கூட்டம்.

ரிஷி சுனக் தவிர,பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டேவிட் கேமரூனையும் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பானது வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ராஜ்நாத் சிங், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியா – இங்கிலாந்து உறவுகளை மேம்படுத்துவது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் கேமரூனுடன் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இங்கிலாந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் ஆகியோர் இணைந்து இங்கிலாந்து – இந்தியா பாதுகாப்புத் தொழில்துறை தலைமை நிர்வாக அதிகாரிகளின் வட்டமேஜை கூட்டத்தை நடத்தினர்.அதைத் தொடர்ந்து இரண்டு உயர்மட்டக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் இங்கிலாந்து பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த தலைமை நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் இங்கிலாந்து இந்தியா வர்த்தக கவுன்சில் (யுகேஐபிசி), இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல், பாதுகாப்பு தொழில் துறை நிறுவனங்களான பிஏஇ சிஸ்டம்ஸ், ஜிஇ வெர்னோவா, ஜேம்ஸ் ஃபிஷர் டிஃபென்ஸ், லியோனார்டோ ஸ்பா, மார்ட்டின்-பேக்கர் ஏர்க்ராஃப்ட் கம்பெனி லிமிடெட், எஸ்ஏஏபி யுகே, தாலெஸ் யுகே, அல்ட்ரா-மாரிடைம் ரோல்ஸ் ராய்ஸ், ஏடிஎஸ் குரூப் மற்றும் எம்பிடிஏ யுகே ஆகிய நிறுவன பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Exit mobile version