Site icon Tamil News

இந்ததியா – வயநாடு நிலச்சரிவு பலி 185 ஆக அதிகரிப்பு; 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 225 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் நாளாக இன்று (31) நடைபெறும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முண்டக்கை பகுதியில் சிக்கிக் கொண்டு இரண்டு தங்கும் விடுதிகளில் தஞ்சம் புகுந்திருந்த 19 பேர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சாலியாற்றில் 15 சடலங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டன.

இதுவரை பலியானோர் எண்ணிக்கை 185, அவர்களில் 89 பேரின் அடையாளம் தெரியவந்துள்ளது. 143 சடலங்களுக்கு உடற்கூராய்வு நிறைவுபெற்றுள்ளது. நிலச்சரிவில் மாயமானவர்கள் 225 பேர் என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள வரலாற்றில் மிக மோசமான நிலச்சரிவு இதுவென்பதால் நேற்றும், இன்றும் கேரள அரசு துக்கம் அனுசரிக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள சட்டப்பேரவையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனும், ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஆகியோர் வயநாட்டுக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை கண்காணிக்கவுள்ளனர்.

வயநாட்டில் 45 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3000க்கும் அதிகமானோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 96569 38689, 80860 10833 ஆகிய தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் பொது மக்கள் உதவிக்காக அறிவித்துள்ளது

Exit mobile version