Site icon Tamil News

சீனாவின் போர்ப் பயிற்சியில் போர் விமானங்கள் அதிகரிப்பு; தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள தைவான்

கடலில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சீனாவின் ஷான்டோங் போர்க் கப்பலுடன் சேர்ந்து பயற்சி செய்ய அப்பகுதியை நோக்கி விரையும் சீனப் போர் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தைவான் தெரிவித்துள்ளது.இதையடுத்து, சீன ராணுவ நடமாட்டங்களை மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தைவான் கூறியது.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நேட்டோ உச்சநிலை மாநாடு நடந்து வரும் வேளையில், சீனா இந்தப் போர்ப் பயிற்சியை நடத்தி வருகிறது.உக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு சீனா ஆதரவு தெரிவிப்பதாக நேட்டோ ஏற்கெனவே அதிருப்திக் குரல் எழுப்பியிருந்தது.ஐரோப்பாவுக்கும் அதன் பாதுகாப்புக்கும் சீனா தொடர்ந்து பல சவால்களை ஏற்படுத்துவதாக அது கூறுகிறது.

இந்நிலையில், ஷான்டோங் போர்க்கப்பல், பசிபிக் கடலுக்குச் செல்லும் வழியில் பிலிப்பீன்சுக்கு மிக அருகில் சென்றதாக தைவானிய பாதுகாப்பு அமைச்சர் ஜூலை 10ஆம் திகதியன்று தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் தைவானைச் சுற்றி 66 சீனப் போர் விமானங்கள் பறந்ததாகத் தைவானியத் பாதுகாப்பு அமைச்சு கூறியது.அவற்றில் 39 போர் விமானங்கள் தைவானின் தென் , தென்கிழக்கு திசையை நோக்கிப் பறந்ததாக அமைச்சு தெரிவித்தது.

சீனாவுக்குச் சொந்தமான 36 போர் விமானங்கள் பசிபிக் கடலின் மேற்குப் பகுதியை நோக்கிச் சென்றதாக தைவான் அதற்கு முன்பு தெரிவித்திருந்தது.அங்கு அவை ஷான்டோங் போர்க்கப்பலுடன் சேர்ந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

சீனாவுக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்களைக் காட்டும் படங்களை தைவானியத் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டது.அப்படங்கள் அண்மையில் எடுக்கப்பட்டவை என்று தெரிவித்த அமைச்சு, அவை எப்போது, எங்கு எடுப்பட்டன என்ற தகவலை வெளியிடவில்லை.

Exit mobile version