Site icon Tamil News

என் 2 குழந்தைகளைக் கொன்று விட்டேன்… பொலிஸாருக்கு போன் செய்து தற்கொலை மிரட்டல் விடுத்த தாய்!

தனது இரண்டு குழந்தைகளை தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்த தாய், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த கங்காதேவி குடும்பத்தினர் பெங்களூரு ஜலஹள்ளியில் வசித்து வந்தனர். கங்காதேவி பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியருக்கு லட்சுமி(9), கௌதம்(7) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். கங்காதேவி தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங்கில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு கங்காதேவி போன் செய்துள்ளார். தனது இரண்டு குழந்தைகளையும் தலையணையால் அழுத்தி கொலை செய்ததாக அவர் கூறியதைக் கேட்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து பேசிய கங்கா தேவி, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இதையடுத்து விரைந்து சென்ற பொலுஸார், கங்காதேவி வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு உயிரிழந்த இரண்டு குழந்தைகளுக்கு நடுவே அமர்ந்திருந்த கங்காதேவியை கைது செய்தனர்.

இதையடுத்து ஜலஹள்ளி காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. அரசு ஊழியராக வேலை பார்த்த தனது கணவர், தனது மகளிடம் தவறாக நடக்கப் பார்த்ததாக கங்கா தேவி பொலிஸில் புகார் செய்தார்.

இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தியதில் அது உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து கங்காதேவி கணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் மனஉளைச்சலில் இருந்த கங்காதேவி தனது குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தற்கொலை செய்ய முடிவு செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து கங்காதேவி மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது இரண்டு குழந்தைகளை தாயே கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version