Site icon Tamil News

ஹரக் கட்டாவின் மனுவை 08ஆம் திகதி பரிசீலனைக்கு அழைப்பாணை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரராக கருதப்படும் நந்துன் சிந்தக அல்லது ‘ஹரக் கட்டா’ தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 8ஆம் திகதி கூடுமாறு உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவை செல்லுபடியற்ற வகையில் ஆணை பிறப்பிக்குமாறு கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜானக பண்டார, கொலை மற்றும் போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் கீழ் ஹரக் கட்டாவுக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் 22 வழக்குகள் உள்ளதாக தெரிவித்தார்.

வேறொருவரின் கடவுச்சீட்டின் அடிப்படையிலேயே அவர் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், தற்போதைய தடுப்புக் காவல் உத்தரவை இரத்துச் செய்து அவரை விடுதலை செய்தால் மீண்டும் நீதிமன்றத்திலிருந்து தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளார்.

அவருக்கு பிறப்பிக்கப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு எதிர்வரும் 10ஆம் திகதி நிறைவடையவுள்ளதாகவும், அது மேலும் நீடிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இங்கு குறிப்பிட்டார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் 8ஆம் திகதி பெஞ்சை கூட்டுமாறு உத்தரவிட்டது.

Exit mobile version