Site icon Tamil News

யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் நால்வர் கைது

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக இளைஞர்கள் நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தை பேசியதால் அதனை தட்டிக்கேட்டவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால் தான் பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

நல்லூர் அரசடியைச் சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதுடைய நால்வரே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (30) பகல் யாழ்ப்பாணம் நகர பழக்கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரி ஒருவரை மோட்டார் சைக்கிள் வந்த இருவர் கடத்திச் சென்றனர்.

அவரை கடத்திச் சென்றவர்கள் உள்ளாடையுடன் வைத்து கடுமையாகத் தாக்கி காணொளி பதிவு செய்துள்ளனர். பின்னர் படுகாயம் அடைந்த அவரை அங்கே விட்டுவிட்டு தப்பி சென்றனர்.

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான பழக்கடை வியாபாரியினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விசாந்தவின் கீழ் பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையில் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களிலேயே பழக்கடை வியாபாரியை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

குறித்த பழக்கடை வியாபாரியிடம் பழம் வாங்கச் சென்ற பெண் ஒருவருடன் தகாத வார்த்தையால் பேசியுள்ளார். அதுதொடர்பில் கேட்கச் சென்றவரின் கழுத்தில் கத்தியை வைத்து பழக்கடை வியாபாரி மிரட்டியுள்ளார்.

அதனால் தான் அவரை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தினோம் என்று சந்தேக நபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் இன்று (01) யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், கத்தி, தொலைபேசி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

Exit mobile version