Site icon Tamil News

பணத்திற்காக 10வயது சிறுமியின் கைகளைக் கட்டி தொடையில் அயர்ன் பாக்ஸால் சூடு… சித்ரவதை செய்த கொடூர பாட்டி!

பணத்திற்காக தனது 10 வயது பேத்தியை கட்டி வைத்து தொடையில் அயன் பாக்ஸ் பெட்டியால் பாட்டி சூடு வைத்து சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவடடம், ஷிரா தாலுகாவில் உள்ள நிட்காட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் நரசம்மா. இவரது மகள் மகா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது, 10). கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நரசம்மா அகால மரணமடைந்தார். இந்த நிலையில் மதுகிரி தாலுகா புஜரஹள்ளி கிராமத்தில் மகா வசிக்கிறார். அத்துடன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். அவரது பெயரிலும், நரசம்மாவின் தாய் நஞ்சம்மா ஆகிய இருவர் பெயரிலும் 4 லட்ச ரூபாய் வங்கியில் ஜாய்ன்ட் அக்கவுண்டாக டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிவராத்திரி பண்டிகைக்காக ஊருக்கு வந்த நரசம்மாவின் தாய் நஞ்சம்மா, 9-ம் திகதி இரவு மகாவை தனது ஊருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்து மகாவிடம் கேட்டுள்ளார். அந்த பணத்தை எடுத்து தருமாறு அவர் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு சிறுமி மகா ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் அவரின் கைகளை கட்டி வைத்த நஞ்சம்மா, அயன் பாக்ஸ் பெட்டியை வைத்து அவரது தொடையில் சூடு வைத்துள்ளார். அப்போது அவர் கத்தாமல் இருக்க மகாவின் வாயை, நஞ்சம்மாவின் மகன் பசவராஜ் இறுக்கமாக பொத்தியுள்ளார். சூடு வைத்ததால், மகாவின் தொடை பகுதி வெந்து போனது. இந்த சம்பவம் குறித்துவெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என நஞ்சம்மா, சிறுமி மகாவை மிரட்டியுள்ளார்.

தற்போது மகாவுக்கு பள்ளியில் தேர்வு நடைபெற்று வருகிறது. அதில் அவர் கலந்து கொள்ளாததால் இந்த சித்ரவதை சம்பவம், வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் மகாவை ஊருக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, தேநீர் கொட்டியதால் காயம் ஏற்பட்டதாக நஞ்சம்மா கூறியுள்ளார். ஆனால், நடந்த சம்பவத்தை மகா சொன்னதால் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ந்து போனார்கள்.

இந்த சம்பவம் குறித்து படவனஹள்ளி காவல் நிலைய பொலிஸார் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்த பொலிஸார் விசாரணை நடந்து வருகிறது. சிறுமி மகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பணத்திற்காக தனது பேத்திக்கு அயர் பாக்ஸ் கொண்டு பாட்டி சூடு வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version