Tamil News

பிரபல நடிகைக்கு 6 மாதம் சிறை தண்டனை! சென்னை நீதிமன்றம் உத்தரவு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகைக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கமல்ஹாசன் நடித்த ’மன்மத லீலை’ ’சலங்கை ஒலி’ ’நினைத்தாலே இனிக்கும்’ ’தசாவதாரம்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா.

இவர் அரசியலிலும் இன்னும் சில கட்சிகளில் இருந்து உள்ளார் என்பதும் தற்போது அவர் பாரதிய ஜனதாவில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஜெயப்பிரதாவுக்கு சென்னையில் ஒரு திரையரங்கம் இருந்த நிலையில் அந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டது.

தொழிலாளர்களின் இந்த புகார் குறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு சில ஆண்டுகளாக விசாரணை நடந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் நடிகையும் முன்னாள் எம்பியுமான ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை அடுத்து நடிகை ஜெயப்ரதா இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version