Site icon Tamil News

ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் – தேர்தலில் போட்டியிட திட்டம்!

அல்-அஜீஸியா ஊழல் வழக்கிலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபை இஸ்லாபாத் உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுவித்தது.

ஏற்கெனவே, அவா் மீது தொடரப்பட்டிருந்த அவென்ஃபீல்ட் ஊழல் வழக்கிலிருந்தும் நவாஸை அந்த நீதிமன்றம் கடந்த மாதம் விடுவித்தது.

பனாமா ஆவண முறைகேடு விவகாரத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமா் பதவியிலிருந்து அகற்றப்பட்ட நவாஸுக்கு அல்-அஜீஸியா உள்ளிட்ட ஊழல் வழக்குகளில் ஊழல் தடுப்பு நீதிமன்றம் கடந்த 2018-இல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது. பின்னா் சிகிச்சைக்காக 2019இல் லண்டன் சென்ற நவாஸ் அங்கேயே தங்கிவிட்டாா். அவரை தப்பியோடிய குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.

இந்த நிலையில், கடந்த அக்டோபரில் பாகிஸ்தான் திரும்பிய நவாஸ், சிறைத் தண்டனைக்குக் காரணமாக இரு ஊழல் வழக்குகளில் இருந்தும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளாா்.

பணவீக்கம் காரணமாக பாகிஸ்தான் நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு லண்டன் சென்ற முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், சில மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பினார். வரும் ஜனவரியில் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டு அவர் நாடு திரும்பியுள்ளதாக கூறப்பட்டது. இந்த சூழலில் இரு ஊழல் வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டதால், நவாஸ் ஷெரீப் தேர்தல் சிக்கலில்லாமல் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version