Site icon Tamil News

எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த நேபாளி! அடேங்கப்பா இத்தனை முறையா?

நேபாளத்தின் புகழ்பெற்ற மலையேற்ற வீரரான கமி ரீட்டா ஞாயிற்றுக்கிழமை உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 29-ஆவது முறையாக ஏறி அதிகமுறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறியவா் என்ற தனது முந்தைய சாதனையைத் தானே முறியடித்துள்ளாா்.

54 வயதான கமி ரீட்டா ஞாயிற்றுக்கிழமை காலை 7:25 மணிக்கு 8,848 மீ உயரத்தை 29-ஆவது முறையாக ஏறி சாதனை புரிந்தாா் என நேபாள சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குநா் ராஜேஷ் குருங் தெரிவித்தாா்.

எவரெஸ்ட் மலையேறும் பயணத்தில் துணை ஊழியராக கமி 1992-இல் பணியாற்றத் தொடங்கினார்.
அப்போதிலிருந்து, கமி பயமின்றி பல பயணங்களை மேற்கொண்டார்.

முதல் முறையாக 1994-ஆம் ஆண்டு தனது 24-ஆவது வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சிகரத்தை எட்டினார்.

எவரெஸ்ட் சிகரத்தைத் தவிர கே2 சிகரம், சோ ஓயு, லோட்சே மற்றும் மனஸ்லு ஆகிய சிகரங்களிலும் எறி அவா் சாதனை புரிந்துள்ளாா். கடந்த ஒரே ஆண்டில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி 28-ஆவது முறையாக சாதனையைப் பதிவு செய்தார்.

அவரின் 29-ஆவது எவரஸ்ட் பயணத்தில் அவருடன் 20 மலையேற்ற வீரா்கள் பயணித்தனா். அதில் 13 போ் நேபாளத்தைச் சோ்ந்தவா்கள். மீதமுள்ளவா்கள் அமெரிக்கா, கனடா மற்றும் கஜகஸ்தான் நாடுகளைச் சோ்ந்தவா்கள். அனைவரும் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாகச் சிகரத்தை அடைந்தனர்.

வரும் வாரங்களில் நூற்றுக்கணக்கான ஏறுபவர்கள் மலையேற்றத்தை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் பருவம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

நேபாள அரசாங்கம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான வசந்த காலத்திற்காக ஏறக்குறைய 400 மலையேறும் அனுமதிகளை வழங்கியுள்ளது. ஏறக்குறைய அனைத்து ஏறுபவர்களும் உள்ளூர் வழிகாட்டியுடன் இருக்கிறார்கள், அதாவது ஏறக்குறைய 800 பேர் ஏறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 600க்கும் மேற்பட்டோர் உச்சத்தை எட்டினர். ஆனால் இது கொடிய ஏறும் பருவங்களில் ஒன்றாகும். இந்நிலையில் மலையில் 18 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version