Site icon Tamil News

இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்து ஜப்பான் அரச பிரநிதியுடன் கலந்துரையாடல்!

ஜப்பான் அமைச்சரவை அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர்  புஜிமாரு சடோஷி மற்றும் பிராந்திய மறுமலர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை மறுசீரமைப்புக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர்  யமமோட்டோ கொசோ ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர்.

இதன்போது இலங்கையில் ஜப்பான் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக தற்போது நடுவில் நிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மக்களுக்குப் பயன்தரும் வகையில் மீள ஆரம்பிக்கப்பட வேண்டுமென கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் கடன் மேம்படுத்தல் செயல்முறை முடிந்த பின்னர், அந்த திட்டங்கள் அனைத்தையும் மீண்டும் தொடங்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதுடன், இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு திட்டங்கள் குறித்து விசாரணை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் திரு மிசுகோஷி ஹிடேகி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Exit mobile version